கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 27). கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு இவர், 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கொடைக்கானல் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட ஜீவாவுக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரமும், இந்திய தண்டனை சட்டம் 363-ன் (கடத்தல்) கீழ் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.