சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான கொள்முதல் நடந்து வருகிறது.
இந்த பரிசுத்தொகுப்பில் கடந்த ஆண்டு ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கத்தொகை வழங்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்தநிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.1,000 தொகையானது பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.