சென்னை,
தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் விசாரணை அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இந்தச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது, 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 10.5% உள் ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
முன்னதாக வன்னியர் உள்ளிட்ட எம்.பி.சி பிரிவினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைகு ஏன் தடை விதிக்க கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, சிறப்பு இடஒதுக்கீட்டால் எவருக்கும் பாதிப்பு இல்லை; ஏப்ரல் மாதமே அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்றும், எனவே வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என்றும், வழக்கை ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.