ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குமரன்கரடு பகுதியை சேர்ந்தவர் சத்தீஸ்வரன். இவரது மனைவி சத்யா. இவர்கள், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்குள்ள நூற்பாலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று வந்தனர். இவர்களது மகள் மணிமேகலை (வயது 15). இவர் காசிபாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை கனிஷ்கா (14), அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் அக்காள்-தங்கை இருவரும் நேற்று, பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மாலை தங்கை கனிஷ்கா வீட்டின் வெளியே பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் மணிமேகலை, சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.