தமிழக செய்திகள்

30 மாத்திரைகளை தின்று 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை... சேலத்தில் பரபரப்பு

மாணவி தேவிஸ்ரீ அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சேலம்,

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவை சேர்ந்தவர் சிவக்கு மார். இவருடைய மனைவி வரலட்சுமி (வயது 35). இவர்களுக்கு தேவி ஸ்ரீ (14) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் இருந்தனர். சிவக்குமார் வீட்டு உபயோக பொருட்கள், சோப்பு, சலவை தூள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தேவி ஸ்ரீ அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.

மாணவி தேவி ஸ்ரீ அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவளை கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் மாணவி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்றும், நீ எப்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெறுவாய் என்றும் மாணவியை பெற்றோர் திட்டி செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பள்ளிக்கு சென்ற தேவி ஸ்ரீ மதியம் 12.30 மணி யளவில் வயிறு வலிப்பதாக ஆசிரியரிடம் கூறி உள்ளாள். இது குறித்து தகவல் அறிந்த தேவி ஸ்ரீயின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் மாணவியிடம் விசாரித்ததில் நீங்கள் திட்டியதால் பள்ளியில் கொடுத்த 10 சத்து மாத்திரைகளை வீட்டில் வைத்து தான் தின்றதாகவும், பள்ளியில் வைத்து மேலும் 20 மாத்திரைகளை தின்று விட்டதாகவும் கூறி உள்ளாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேவி ஸ்ரீ அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்த புகாரின்பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.