தமிழக செய்திகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலி; ஆக்சிஜன் தட்டுப்பாடு என உறவினர்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் 11 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பலியாயினர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி ஆயிரத்து 500க்கும் மேற்போட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்நிலையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.

SCROLL FOR NEXT