தமிழக செய்திகள்

வி.ஏ.ஓ. வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை; போலீசார் விசாரணை

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ்நகரைச் சேர்ந்த ஒருவர், தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 44), தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா(37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தம்பதியினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். கடந்த 16ம் தேதி அவர்கள் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.12லட்சம் ஆகும்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தப்பிச் சென்ற தடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகளைச் சேகரித்தனர்.

இப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.