திருச்சி:
திருச்சி பழைய ஈ.பி.ரோட்டில் உள்ள மாம்பழ கடைகளில் ரசாயனம் தடவிய மாம்பழங்கள் விற்பனை செய்வதாக திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் திடீரென அங்குள்ள மாம்பழ கடைகளில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ரசாயனம் தடவிய சுமார் 1200 கிலோ மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறியதாவது;-
செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த பழங்களை பொதுமக்கள் உண்ணும்போது அவர்களுக்கு வயிற்றில் எரிச்சல் வயிற்றுப் போக்கு காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது புற்றுநோய் வருவதற்கான காரணமாக அமைந்துவிடும். அதனால் உணவு வணிகர்களும் பொதுமக்களும் இதுபோன்று பழங்களை விற்கவோ வாங்கவோ கூடாது.
மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று வருங்காலங்களில் திருச்சி மாவட்டத்தில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த மாம்பழங்களை அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதியில் கொண்டுபோய் அழிக்கப்பட்டது.