தமிழக செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு ஹவுராவிலிருந்து வந்த ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சந்தேகப்படும்படியான வடமாநில நபர்கள் 2 பேரை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் பிரிவினர் விசாரணை செய்தனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் 2 வடமாநிலத்து நபர்களை கைது செய்துள்ளனர்.

விசாரணை

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று, ஹவுராவிலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் இருந்து பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நடந்து சென்றனர். அவர்களை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் பிரிவினர் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 13 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ்லென்கா (வயது 37), பூர்ணசந்திரா(35) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி சென்னையில் உள்ளவரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.