கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவையில் மேலும் 15 நாட்கள் கூடுதல் கட்டுப்பாடுகள்: மாவட்ட கலெக்டர் உத்தரவு

கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,591 ஆக பதிவான நிலையில் இன்று 1658 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 226 பேருக்கும், கோவையில் 224 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் 46 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் கோவையில் மேலும் 15 நாட்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இதன்படி கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள், பூங்காக்கள், மால்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், அடுமனைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டுமே இயங்கலாம் என்றும் பால், காய்கறி, மளிகை கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்து ஞாயிறன்று இயங்க தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT