சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேப்பிலை ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதையன் (50), தனது தோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், இரவு நேரத்தில் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 15 செம்மறி ஆடுகள் மீது மின்னல் தாக்கியதில் அவை பரிதாபமாக உயிரிழந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த ஆடுகளை உடற்கூறாய்வு செய்தனர். பின்னர் அவை புதைக்கப்பட்டன.
இதற்கிடையில், குண்டுகல் மற்றும் ஒலக்கூர் பகுதிகளில் காற்றுடன் பெய்த கனமழையால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. மேலும் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, பெரியப்பட்டி, தளவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.
சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.