தமிழக செய்திகள்

ஊட்டி மலை ரெயிலின் 153-வது ஆண்டு தினம்

ஊட்டி மலை ரெயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள் வண்ண மலர்கள் மற்றும் காகித தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்யும்போது, இயற்கை எழில்மிகு காட்சிகள், மலைகளை தழுவி செல்லும் மேககூட்டங்கள், அருவிகள், நீரோடைகள் உள்ளிட்ட வற்றை கண்டு ரசிப்பதுடன் குகை வழியாக செல்லும் திகில் அனுபவத்தையும் பெறலாம். சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஊட்டி மலை ரெயிலில் பயணிக்க வெளிநாடு மற்றும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மலை ரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

மலைரெயில் போக்கு வரத்து தொடங்கி 153-வது ஆண்டு தொடங்குவதையொட்டி ஊட்டி மலை ரெயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள் வண்ண மலர்கள் மற்றும் காகித தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனை கொண்டாடும் வகையில் மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடினார்கள். இதில் சேலம் கோட்ட ரெயில்வே சீனியர் மெக்கானிக்கல் என்ஜினீயர் கோகுல் வல்லுத் தோட்டம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை காவல்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.