சென்னை,
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டிப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 வரை நடைபெறும்.
அதற்கு முன்னதாக கடந்த 17-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை முதன்முறையாக சுயக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை இணையம் வழியாக தாங்களே https://se.census.gov.inஎன்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுயகணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது.
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 16,922 குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு மூலம் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். எனவே, சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுயக் கணக்கெடுப்பிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.