தமிழக செய்திகள்

சென்னை ஆவடியில் 14 பியூஸ் கேரியர்கள் திருட்டு - 2 பேர் கைது

பியூஸ் கேரியர்கள் திருட்டு தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு என்பது அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், வினித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட 17 பியூஸ் கேரியர்களை செங்குன்றம் அருகே 1,500 ரூபாய்க்கு விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் மீதும் வாகன திருட்டு, இரும்பு திருட்டு போன்ற பல்வேறு திருட்டு புகார்கள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பியூஸ் கேரியர் திருட்டால் அந்த பகுதியில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே மேலும் 3 பியூஸ் கேரியர்களும் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.