தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவன ஆபரேட்டர் ஒருவரின் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை

தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஆஷிக்தனசிங் (வயது 26). இவர் மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளதால், கடந்த 12-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

17 சவரன் நகை கொள்ளை

சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷிக்தனசிங் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.