தமிழக செய்திகள்

நீண்ட நாட்களாக சாலையோரங்களில் விடப்பட்ட 1863 வாகனங்கள் 15 நாட்களில் ஏலம் - சென்னை மாநகராட்சி

15 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நீண்ட நாட்களாக சாலையோரங்களில் விடப்பட்ட 1863 வாகனங்கள் 15 நாட்களில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

1863 வாகனங்கள்

சென்னை காவல் சென்னை மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 1863 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்களை அப்புறப்படுத்தி - அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

15 நாட்களுக்குள் அணுகவும்

இவ்வாகனங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்மந்தப்பட்ட காவல் நிலையமான சென்னை மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு காவல் நிலையங்களை செய்தி வெளியான 15 நாட்களுக்குள் அணுகவும் அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்களை மின்னனு ஏலம் மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.