சென்னை,
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த பயணிகளிடம் இருந்து 1,967 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் கடத்திய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாங்காக்கில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த சமயத்தில், மியான்மர் நாட்டை சேர்ந்த ஒரு பெண் பயணியும், அவருடன் வந்த ஆண் பயணி ஆகியோரை சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்கள் இருவரின் மீதும் அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் நடத்தினர்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அம்பலமாகின:ஆண் பயணி அவரது உடலுக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பிரம்மாண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பெண் பயணியியை சோதனையிட்டபோது, அவரும் தனது உடலுக்குள் ரகசியமாக சிறிய அளவிலான தங்க உருண்டைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய மேல் சோதனையில், அவர்கள் உடலில் மேலும் சில தங்க கட்டிகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டு, அவை அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 24 காரட் சுத்த தங்க கட்டிகளின் மொத்த நிகர எடை 1,967 கிராம் (சுமார் 2 கிலோ) ஆகும். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.2.65 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் சுங்க சட்ட விதிகளின் கீழ் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுங்க சட்ட விதிகளின் கீழ் இரு பயணிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.