கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு ஸ்கூட்டரில் கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் கம்பம்மெட்டு சாலையில் உள்ள சிலுவைகோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் ஸ்கூட்டரில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 200 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் கம்பம் தாத்தப்பன்குளம் தெருவை சேர்ந்த முகமது நபீல் (வயது 24), கோம்பை ரோடு தெருவை சேர்ந்த முகமது உசேன் (27) என்பதும், கஞ்சாவை கேரளாவில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது நபீல், முகமது உசேன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.