தமிழக செய்திகள்

மதுபான பார் காசாளரை அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ஒருவர், பேட்டை எம்.ஜி.ஆர். நகர் அரசு மதுபான பாரில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த வேலு மகன் முத்துராமன் (வயது 41) என்பவர் நெல்லை மாநகரம், பேட்டை எம்.ஜி.ஆர். நகர் அரசு மதுபான பாரில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவரிடமிருந்து சுத்தமல்லி பழவூரைச் சேர்ந்த அகிலன் மகன் கோமு(26) மற்றும் தம்பிராஜ் மகன் ஜெபக்குமார்(22) ஆகிய 2 பேரும் தண்ணீர் பாட்டில் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வாங்கி கொண்டு அதற்கு பணம் கொடுக்காமல் சென்றனர்.

மீண்டும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முத்துராமனை அவதூறாக பேசி அருவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முத்துராமன் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.