சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வீசத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இந்த கொரோனா தடுப்பு விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா விதிமீறல் தொடர்பாக இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 89 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாயும், சமூக விலகலை பின்பற்றாதவர்களிடம் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 8ஆம் தேதி முதல் இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.