தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் மட்டக்கடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டனர்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் நேற்று இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மட்டக்கடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் இருந்த பையில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் தூத்துக்குடி கணேசபுரம் ஜார்ஜ்ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் காட்சன் (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் இவர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து இந்தக் கஞ்சாவை வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காட்சனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்குக் கஞ்சா விநியோகம் செய்த மர்ம நபர்களைப் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.