சென்னை,
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 15 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க 'மேகாலயா பிராஜக்ட்' என்ற பெயரில் அரங்கேறிய சதித்திட்டம் ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
அவரிடம் ரூ.35 கோடி பேரம் பேசி த.வெ.க. ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று மிரட்டல் விடுத்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதானவர்களை அடுத்தடுத்து காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் இந்த வழக்கில் கொரட்டூரை சேர்ந்த கருணாநிதி (வயது 52), சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சரவணன் (49), பள்ளிக்கர ணையை சேர்ந்த வினோத் வெங்கடேசன் (51) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரின் வீடுகளுக்கு திருவல்லிக்கேணி போலீசார் சென்றனர். 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களுடைய வீடுகள், அலுவலகங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விசாரணை முடிவில் கருணாநிதி, சரவணன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். வினோத் வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிக்கு அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க முன்வந்தால் அவர்களுக்கு முன்பணமாக இந்த தொகையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.70 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.2.80 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.