தமிழக செய்திகள்

சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விடமுயன்ற 2 பேர் கைது - ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்...!

சங்கரன்கோவிலில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடமுயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர்.

அதில் 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் சங்கரன்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வந்ததும் தெரிய வந்தது.

பின்னர், உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ. 3 லட்ச கள்ள நோட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT