தூத்துக்குடி,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிள்புரம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 32) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளியான போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் செலிஸ்டின்குமார்(38), அவரது தம்பி மனோ(எ) மனோகுமார்(33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ்(எ) நாகராஜ்(37) ஆகிய 3 பேரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி ADJ - I நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று (1.7.2026) மேற்சொன்ன நபர்களில் மனோ(எ) மனோகுமார் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டும், செலிஸ்டின்குமார் மற்றும் ராஜ்(எ) நாகராஜ் ஆகிய 2 பேர் குற்றவாளி என உறுதி செய்து, அவர்களுக்கு தலா ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.