தமிழக செய்திகள்

வேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது

வேளச்சேரியில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி விஜயாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர். அதில் அந்த வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதியானது.

உடனே பெண் போலீசாருடன் தனிப்படையினர் அந்த வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்திய நெல்லை மாவட்டம் கரிசல்பட்டியை சேர்ந்த சிமியோன் ஜார்ஜ் (வயது 23), திருப்போரூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT