தமிழக செய்திகள்

செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 2 பேர் தங்கச் செயினை பறித்துசென்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி, ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரேம்சங்கர் (வயது 29), ஓட்டுடன்பட்டியைச் சேர்ந்த பிரபு(38) ஆகிய 2 பேரையும் புளியம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் நேற்று பிரேம்சங்கர், பிரபு ஆகிய 2 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த மணியாச்சி உட்கோட்ட டி.எஸ்.பி. அஜுகுமார் மற்றும் இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு பால்பாண்டி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.