தமிழக செய்திகள்

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் கைது

தூத்துக்குடி, தாளமுத்துநகர் பகுதியில் சில இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

தூத்துக்குடி, தாளமுத்துநகர் பகுதியில் சில இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா, மகளிர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் மகளிர் போலீசார் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி வெளி ஆட்கள், பெண்கள் நின்றுகொண்டிருப்பது தெரிய வந்ததது. அங்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனை நடத்திய போது பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராமதாஸ்நகரை சேர்ந்த முனீஸ்வரி (வயது 29), சுனாமி காலனியைச் சேர்ந்த அந்தோணியம்மாள்(38) ஆகிய 2 பேரும் ஆசை வார்த்தைகளை கூறி 2 இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து 2 இளம்பெண்களையும் மீட்ட போலீசார், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முனீஸ்வரி மற்றும் அந்தோணியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட 2 இளம்பெண்களையும் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.