தூத்துக்குடி,
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய பகுதியில் தங்க நகைகள் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 6 வருட சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகைக்கடை பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் மகன் விஷ்ணு (வயது 26) மற்றும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் மாரியப்பன்(31) ஆகிய 2 பேரையும் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி JM- II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி இலக்கியா நேற்று விஷ்ணு மற்றும் மாரியப்பன் ஆகிய 2 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா 6 வருட சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.