தமிழக செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய் தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமணம் செய்ததாக கூறி முருகேசன் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் முருகேசனை கைது செய்தனர். மேலும், குழந்தை திருமணம் செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது திருச்சி மகிளா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

முருகேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.