சென்னை,
200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.