தமிழக செய்திகள்

சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 2,243 வாகனங்கள் பறிமுதல் - 15 நாட்களுக்குள் உரிமை கோர அழைப்பு

வாகனங்கள் குறித்த விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2,243 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை உரிமை கோருவதற்கு 15 நாட்களுக்குள் அணுக வேண்டும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்னை பெருநகர காவல் சென்னை அடையாறு, கீழ்பாக்கம், சென்னை தெற்கு மண்டலம், புனித தோமையார் மலை, பூக்கடை, தியாகராய நகர் மற்றும் அன்ணாநகர் காவல் நிலைய பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மொத்தம் 2,243 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அந்தந்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாகனங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்மந்தப்பட்ட காவல் நிலையமான சென்னை அடையாறு, கீழ்பாக்கம், சென்னை தெற்கு மண்டலம், புனித தோமையார் மலை, பூக்கடை, தியாகராயநகர் மற்றும் அன்ணாநகர் காவல் நிலையங்களை செய்தி வெளியான 15 நாட்களுக்குள் அணுகவும். அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்களை மின்னணு ஏலம் மூலம் கழிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT