கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்து நடந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 22-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை குழந்தைகளை தீயில் பறிகொடுத்த பெற்றோர் தங்கள் வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள் மற்றும் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி முன்பு திரண்ட பெற்றோர், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனருக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தின்பண்டங்களை வைத்தும் குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர்.
பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த துயர சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆகினும், பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் நீங்காத வடுவாக மாறியுள்ளது.