தூத்துக்குடியில் கடந்த 18.10.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துக்குமார் மகன் கருப்பசாமி (வயது 19), கருப்பசாமி மகன் பாலவிக்னேஷ்(22) மற்றும் மாரிமுத்து மகன் முகேஷ்(20) ஆகியோர் மேற்சொன்ன கோவிலின் பூட்டை உடைத்து பூஜை பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வெண்கல மணி, வெண்கல தட்டு, குத்து விளக்கு போன்ற ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.