சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அந்த வகையில் 164 தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் திமுக இன்று வெளியிட்டது.
வேட்பாளர் பட்டியலில் 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனோ தங்கராஜ், ஆர்.காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகிய 3 அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் தொகுதியிலும், கயல்விழி செல்வராஜ் தாராபுரம் தொகுதியிலும், ஆர்.காந்தி ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த நிலையில் அமைச்சர்கள் 3 பேருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.