பல்லடம்,
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (78 வயது), அவரது மனைவி அமலாத்தாள் (75 வயது), மகன் செந்தில்குமார் (46 வயது) ஆகியோர் கடந்த மாதம் 29-ந்தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து ஒரு வாரம் முடிந்தும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை. இது தொடர்பாக 14 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் கம்பளி போர்வை விற்பனை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை, ஆதார் அட்டை நகல்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.