வைகாசி மாத வளர்பிறை கடைசி சுப முகூர்த்த தினமான இன்று தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் சன்னதி முன்பு இன்று காலை 31 திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் புதுமண தம்பதிகள் மற்றும் திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதையெட்டி சிவன் கோவில் தேரடி அருகே தடுப்பு கம்பிகள் வைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் தேரடியில் இருந்து புதுமணத் தம்பதிகள் கோவிலுக்குள் நடந்தே சென்றனர். ரத வீதி முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.