தமிழக செய்திகள்

பூந்தமல்லி சாலையில் பல கோடி மதிப்புள்ள காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 32 கிரவுண்டு நிலம் - அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமான 32 கிரவுண்டு நிலம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் கோவில் வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

சென்னை,

தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக அந்தந்த கோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உத்தரவின் பேரில், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரத்தை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்டு நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இவற்றில் கடந்த 2010-ம் ஆண்டு 12.5 கிரவுண்டு நிலம் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலம் 99 ஆண்டு குத்தகை காலம் முடிவுற்ற பின் கோவில் வசம் ஒப்படைக்க கோவில் செயல் அலுவலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது.

அதனடிப்படையில் பள்ளிக்கூடத்தை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவில் செயல் அலுவர் தியாகராஜனிடம், கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் பல கோடி மதிப்புள்ள 32 கிரவுண்டு இடம் மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கான ஆவணங்களை கோவில் வசம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் (விசாரணை) ந.திருமகள், காஞ்சீபுரம் இணை-கமிஷனர் பொ.ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கோவிலுக்கு சொந்தமான, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மீதம் உள்ள 96.5 கிரவுண்டு பரப்புள்ள இடத்தையும் கோவில் வசம் கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை ஏற்று அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்