தமிழக செய்திகள்

பணகுடியில் 350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனிஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனிஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்த சுமன் (வயது 25) என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

350 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:

இதையடுத்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் வழங்கிய தகவலின் பேரில் மேலும் சோதனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து மொத்தம் 350 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

வாலிபர் கைது:

மேற்சொன்ன சம்பவம் குறித்து, பழவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் (பொறுப்பு பணகுடி காவல் நிலையம்) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுமனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து சுமார் 350 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.