திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). இவரது மனைவி பவித்ரா(35). ஜீவானந்தம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் அவரது மனைவி பவித்ரா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் பவித்ரா கடந்த 28-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த தங்க சங்கிலி, மோதிரங்கள், வளையல், தோடு என மொத்தம் 36½ சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.