நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் கலப்பட டீசல் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகில் கலப்பட டீசல் கொண்டுவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக குடிமை பொருள் வளங்கள் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாடுதுறை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்லால் தலைமையில் போலீசார் நாகை அருகே அக்கரைப்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முதலாவது கடற்கரை சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி மற்றும் மற்றொரு சரக்கு வாகனத்தையும் சோதனை செய்தனர்.
இதில் கேரள மாநில டேங்கர் லாரியில் கலப்பட டீசல் இருப்பதும் அதை மற்றொரு வாகனத்திற்கு மாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி, நாகையைச் சேர்ந்த சரக்கு வாகனம் ஆகிய 2 வாகனங்கள் மற்றும் அதில் இருந்த 9 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலப்பட டீசல் விற்றதாக அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த சிலம்பு செல்வன் (வயது 46) டேங்கர் லாரி டிரைவர் கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சரத் முரளி (35), மற்றொரு சரக்கு வாகன டிரைவரான நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையை சேர்ந்த இருசப்பன் (32), வாகன உதவியாளரான நாகை நம்பியார் நகரை சேர்ந்த ரமேஷ் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.