தமிழக செய்திகள்

தனியார் நிறுவனத்தில் ரசாயன வாயு தாக்கி 4 ஊழியர்கள் மயக்கம் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

பெயிண்ட் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய ஊழியர்கள் மதன்ராஜ், விக்னேஷ் ஆகியோர் கீழே இறங்கினர்.

சென்னை,

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம். கார்களுக்கான எஞ்சின் மோல்டிங் உதிரிபாகங்களை தயாரித்து வருகிறது. இங்குள்ள 30 அடி ஆழ பெயிண்ட் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய நேற்று ஊழியர்கள் மதன்ராஜ், விக்னேஷ் ஆகியோர் கீழே இறங்கினர். அப்போது நச்சு ரசாயன வாயு தாக்கி இருவரும் நிலைகுலைந்து மயங்கினர்.

அவர்களை மீட்க முயன்ற மேற்பார்வையாளர் மணிகண்டன், பாதுகாப்பு மேலாளர் ஸ்ரீதர் ஆகியோரும் நச்சுவாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தனர். அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் உள்ளே இறங்கி 4 பேரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மணிகண்டன், ஸ்ரீதர் ஆகிய இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.