சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மூன்றாம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனினும், தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் தடுப்பூசி செலுத்த வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இலவச தொகுப்பில் புனேவிலிருந்து விமானம் மூலம் 34 பெட்டிகளில் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தன. அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பூசிகள் உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது.