விருத்தாசலம்,
அடித்து கொலை
விருத்தாசலம் அருகே உள்ள தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் அறிவு என்ற அறிவழகன்(வயது 45). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று குப்பநத்தம் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்த ஒருவரின் செல்போனை பறித்ததாக கூறி மர்ம கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. இதில் அறிவழகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
4 பேர் கைது
போலீசாரின் தீவிர விசாரணையில் விருத்தாசலம் குப்பநத்தம் பகுதியை சேர்ந்த கோபால்(22) என்பவரின் செல்போனை அறிவழகன் திருடியதாக கூறி அவரை கோபால் மற்றும் இவரது நண்பர்கள் திருவரசன்(21), அமீர்பாஷா(20), செந்தமிழ்ச்செல்வன்(21) ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோபால் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.