ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரே உள்ள பகுதியை சேர்ந்தவர், முகமது ரிபைதின்(வயது 28). இவர் பரமக்குடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அரசு ஊழியர் ஆவார். சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். முகமது ரிபைதினின் தந்தை மட்டும் வீட்டில் இருந்தார். மேலும் அவர் வீட்டுக்கதவை திறந்து போட்டு விட்டு ஒரு அறையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பட்டப்பகலில் 2 பேர் நைசாக உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 3 பீரோக்களை திறந்து அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீசிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் திருடியது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அன்னை சத்யா நகரை சேர்ந்த சரவணன்(42), திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியை சேர்ந்த பாண்டி அழகு (37) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த ரூ.11 லட்சத்து 57 ஆயிரத்தை ரொக்கமாக வைத்திருப்பதாகவும் கூறினர். பின்னர் அவர்களிடம் இருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் விற்பனை செய்த நகைகளையும் மீட்டனர். கைதான சரவணன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர்.