தமிழக செய்திகள்

ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாக கூறி பண மோசடி: 5 பேர் அதிரடி கைது

சென்னையைச் சேர்ந்தவருக்கு ரூ.1 கோடி கடன் பெற்றுத்தர ரூ.1 லட்சம் கமிஷன் தர வேண்டும் என கூறி, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் அந்த நபரை, நெல்லையில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் அருகே பண மோசடி முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.3.68 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

ரியல் எஸ்டேட் தொழில்

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அகஸ்தியர்பட்டியில், தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 29) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ரூ.1 கோடி கடன் பெற்றுத்தர ரூ.1 லட்சம் கமிஷன்

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(47) என்பவர் ரூ.1 கோடி கடன் தேவைப்படுவதாக சென்னையைச் சேர்ந்த முகம்மது அக்தர்(23) என்பவரை அணுகியுள்ளார். முகம்மது அக்தர், தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் கடன் தொகையை பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.1 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் எனவும் கூறி, ஜெயச்சந்திரனை அகஸ்தியர்பட்டியில் உள்ள வெங்கடேஷின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

போலீசார் சோதனை

அங்கு பணம் இருப்பது போன்று கட்டுக்கட்டாக காண்பித்து, ஜெயச்சந்திரனிடம் கடன் பத்திரத்தில் கையெழுத்தும், 7 வங்கி காசோலைகளில் கையெழுத்தும் பெற்றதாகத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் போலீஸ் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.3.68 லட்சம் பறிமுதல்

அப்போது, வீட்டின் மாடியில் ரூ.500 நோட்டுகள் அடங்கிய கட்டுகள் மற்றும் மாதிரி நோட்டுகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

5 பேர் அதிரடி கைது

இதுதொடர்பாக வி.கே.புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்(29), ராஜேஷ்(23), சிவசுப்பிரமணியன்(23), கதிர்வேல்பாண்டி(23) மற்றும் சென்னையைச் சேர்ந்த முகம்மதுஅக்தர்(23) ஆகியோர் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

பொதுமக்கள் இதுபோன்ற மோசடி முயற்சிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்கள் மூலம் அதிக தொகை கடன் பெற்றுத் தருவதாகக் கூறப்படும் ஆசைவார்த்தைகளை நம்பி பணம் அல்லது முக்கிய ஆவணங்களை வழங்க வேண்டாம் எனவும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT