கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நீலமங்கலம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் 1 கிலோ 130 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், கள்ளக்குறிச்சி மோரைப்பாதையை சேர்ந்த ஷேக்காதர் மகன் யாசின் (வயது 26), மணி கூண்டு தெருவை சேர்ந்த பாபுலால் மகன் முகமது கவுஸ் (22). விளாந்தாங்கல் ரோடு பெரியசாமி மகன் வினோத்குமார் (28), காமானந்தல் கிராமத்தை சேர்ந்த மஸ்தான் ஷெரீப் மகன் முகமது அந்தீப் (22), கொளஞ்சியப்பன் மகன் வெற்றிவேல் (24) ஆகியோர் என்பதும், திருச்சியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து யாசின் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.