தமிழக செய்திகள்

50 கிலோ எடை... மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ‘கொப்பரைக்குல்லா மீன்’

ஒரு விசைப்படகில் அரிய வகையான 2 கொப்பரைக்குல்லா மீன்கள் சிக்கி இருந்தன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தெற்குவாடி துறைமுகத் தில் இருந்து நேற்று முன்தினம் 90 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

இதில் ஒரு விசைப்படகில் அரிய வகையான 2 கொப்ப ரைக்குல்லா மீன்கள் சிக்கி இருந்தன. இதில் ஒரு மீன் சுமார் 50 கிலோ எடையுடனும், மற்றொரு மீன் 40 கிலோ எடையுடனும் இருந்தன. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, கொப்பரைக்குல்லா மீனானது மிக ஆழ்கடல் பகுதியில் இருக்கக்கூடியது. வலையில் சிக்குவது மிக அரிதாகும்.

ஆபத்தான மீனும் கூட, வலைகளில் சிக்கினால், தனது கூர்மையான அலகால் வலையை கிழித்துவிடும். கொப்பரைக்குல்லா மீன் குத்தி சில மீனவர்களின் கைகளில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த மீனை மயில் மீன் என்றும் அழைப்போம்" என கூறினார். இந்த கொப்பரைக்குல்லா மீன்களை, வியாபாரி ஒருவர் ரூ.16 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றார்.