தமிழக செய்திகள்

5,000 புத்தகங்களை சிறைக்கும் நூலகத்திற்கும் வழங்கிய மு.க.ஸ்டாலின்

6 லட்சம் புத்தகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்களும், பொதுமக்களும் ஏராளமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி வருகிறார்கள். அவ்வாறு தனக்கு வந்த 5,000 புத்தகங்களை சிறைச்சாலைக்கும், பொது நூலகத்திற்கும் அவர் நன்கொடையாக அள்ளி வழங்கி அசத்தியுள்ளார்.

கைதிகள் படிக்க 3,000 புத்தகங்கள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகள் படித்து மனம் திருந்தும் வகையில் 3,000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனிடம் நேரில் ஒப்படைத்தார்.

நூலகம்

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள குளக்கரை நூலகத்திற்காக 2,000 புத்தகங்கள் தி.மு.க நிர்வாகி எஸ்.ஆர்.ராஜாவிடம் வழங்கப்பட்டுள்ளன.

சால்வை வேண்டாம்... புத்தகம் தாங்க

கடந்த 2018-ஆம் ஆண்டு தி.மு.க தலைவராக பொறுப்பேற்றது முதல், "என்னை பார்க்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்களை மட்டுமே தர வேண்டும்" என்று ஸ்டாலின் அன்பு கட்டளை விடுத்திருந்தார்.

6 லட்சம் புத்தகங்கள்

அதன்படி இதுவரை தொண்டர்கள் வழங்கிய சுமார் 6 லட்சம் புத்தகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாசிப்பு பெருகினால் தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் இருக்கும்" என்று உருகிய மு.க.ஸ்டாலின், புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், படிப்பகங்கள் கடிதம் எழுதினால் உடனே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.