தமிழக செய்திகள்

தேனீக்கள் கொட்டியதில் அரசு பள்ளி மாணவர்கள் 51 பேர் காயம்

இந்த சம்பவத்தில் மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்டக்குடி,

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்து மங்களூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

தேனீக்கள்

இன்று காலை வழக்கம் போல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி கட்டிடங்களுக்கு இடையில் இருந்த வேப்பமரத்தில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீக்களை, யாரோ ஒருவர் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை தாக்கின. தேனீக்கள் கொட்டியதில் 51-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

சிகிச்சை

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக ஓடி வந்து காயம் அடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் 30 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த தேனீக்கூட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.