சென்னை,
பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் கடந்த 16-ந்தேதி வரையிலான காலத்தில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.3,052.87 கோடியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரூ.2,020.81 கோடி அதிகமான வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் விளைவாக இந்த துறையால் ஈட்டப்படும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் வருவாய் குறைந்து இருந்தபோதிலும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.வி.மூர்த்தியின் சீரிய முயற்சிகளின் காரணமாக அடுத்து வந்த மாதங்களில் வருவாய் சரிசெய்யப்பட்டு கடந்த 16-ந் தேதி வரை ஈட்டப்பட்டுள்ள வருவாயானது பேரிடர் ஏதும் இல்லாத இயல்புநிலை காலத்திற்கான வருவாயை விட அதிகரித்துள்ளது பதிவுத்துறையின் சாதனையாகும்.
மேலும் சார்பதிவக எல்லைகள் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சீரமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் அறிவித்துள்ளதைத்தொடர்ந்து அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் சீரமைக்கப்பட வேண்டிய சார்பதிவக எல்லைகள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட பதிவாளர்களுக்கு எழுத்து மூலமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.